Sunday 23 January 2022

கவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]

 கவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]


கவிஞர் கண்ணதாசனின் வனவாசம் படித்து முடித்தேன்,விறுவிறுப்பான எழுத்து நடையில் கவிஞர் தன் சுயவரலாற்றை தன்னை அவன் என்னும் கதாபாத்திரமாக குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். படித்ததில் எழுந்த ஆச்சரியங்கள் சொல்லில் அடங்காதது, கருணாநிதியின் நயவஞ்சகத்தை மனிதர் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். கவிஞர் ஒரு அப்பாவி, வெகுளித்தனமாக இருந்திருக்கிறார் என்பது அவர் தன் வாழ்வின் இக்கட்டான சூழ்நிலையையும் அவமானங்களையும் பட்டவர்த்தனமாக உரைப்பதிலிருந்தே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

வனவாசம் ஒரு தன்வரலாற்று நூல் ,எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த முத்தையா என்னும் கண்ணதாசன் தன் 17ஆம் வயதில் சிறுகூடல்பட்டியில் இருந்து தன் வீட்டைப் பிரிந்து சென்னைக்கு வேலை தேடி பேருந்தில் ஏறியது முதல் அவர் சமையலாளுக்கு எடுபிடியாகி, அஜாக்ஸ் நிறுவனத்தில் கடைநிலை ஊழியனாகி, பத்துக்கும் மேற்பட்ட சிறு பத்திரிக்கைகளில் அச்சுக்கோர்ப்பவராக,கதை எழுதுபவராக, கவிதை எழுதுபவராக பணியாற்றி நிரந்தர வருமானம் வேண்டி  பத்துக்கும் மேற்பட்ட சிறு பத்திரிக்கைகளில் ஆசிரியராக பணியாற்றிய நீண்ட காலங்கள், அவர் மெல்ல படிப்படியாக வளர்ந்து கன்னியின் காதலி [1949] படத்தின் கலங்காதிரு மனமே பாடல்   எழுதி சினிமாவில் கவிஞராகியது, தன் 22ஆம் வயதில் இன்னொரு வீட்டிற்கு தன் சொந்தப் பெற்றோரால் இவன் எங்கே உருப்படப்போகிறான்? என்று தத்துக் கொடுக்கப்பட்டுச் சென்றது, அதன் பின்னர் அவருக்கு புதிய உறவினர் பார்த்து வைத்த சுமாரான அழகுடைய பெண்ணுடன் முதல் திருமணமானது, இரண்டாவதாக அழகிய பெண்ணை இவர் விரும்பி சேர்த்துக்கொண்டது, இல்லறஜோதி படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியது. அவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணாதுரை மீதான ஆர்வக்கோளாறில் கலந்து கொண்டு ஒன்றரை வருடங்கள் சிறை தண்டனை பெற்று திருச்சி சிறை சென்றது [அதில் அண்ணாத்துரைம் கருணாநிதி உள்ளிட்டோர் லாவகமாக தப்பித்தது] , ஐந்து மாதத்தில் ஒரு நல்ல நீதிபதியின் கருணையால் கடுஞ்சிறை மீண்டது,

அதன் பின்னர் பல தொடர் ஜீவ மரணப் போராட்டங்களுக்கிடையில் மீண்டும் திரைப்படங்களுக்கு கதாசிரியராகி, இயக்குனராகி,அரைகுறை நாத்திகனாகி, படத் தயாரிப்பாளராகி  மாலையிட்ட மங்கை, சிவகங்கை சீமை, கவலை இல்லாத மனிதன்,வானம்பாடி, ரத்தத்திலகம், கருப்புப்பணம் என்று  ஐந்து படங்கள் தயாரித்து ரூபாய் 7லட்சம் கடன்காரரானது, அந்தக் கடன்களைப் சினிமாவில் பாடல்கள் எழுதியே அடைத்தது  , அரை குறை அரசியல்வாதியாக இருந்தவர் கட்சிக்குள் நடக்கும் உள்கட்சி அரசியலால்  சுமார் 14 வருடங்கள் பொருமை காத்து நொந்துபோய் இனி பொறுப்பதற்கில்லை என்று சம்பத் அவர்களுடன் இணைந்து ராஜினாமாக் கடிதம்  தந்து வெளியேறுவது வரை நாம் கவிஞருடனே பயணிக்கிறோம். கவிஞர் அந்த முக்கியமான தினத்தின் பின்னர் அமைந்த தன் புனர் ஜென்ம வாழ்க்கை வரலாற்றை மனவாசம் என்று எழுத முடிவெடித்திருப்பதாக இதில் சொல்லியிருந்தார்,அதன் பின்னர் மனவாசமும் வெளியாயிற்று,அதையும் படித்து விட்டு எழுதுவேன்.

தன் வாழ்வின் கடினமான தருணங்களில் எத்தனை சிறு உதவி செய்திருந்தாலும் அவர்களை குறிப்பிட்டு மனதார நன்றி கூறியிருக்கிறார் கவிஞர்.  அதில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் இங்கே,

அப்போது சென்னை மிண்ட் சாலையில் சாய்பாபா புத்தகாலயம் என்னும் பதிப்பாளர் இருந்திருக்கிறார், அவர் பஞ்சத்திலிருக்கும் துவக்கநிலை கதாசிரியர்கள், கவிஞர்களின் பசி பட்டினியை ,அவர்களின் படைப்புகளின் கைப்பிரதிகளை எடைக்கு எடுத்துக்கொண்டு பணம் தந்து பிரசுரித்ததன் மூலம் தீர்த்தும் வந்திருக்கிறார்.

அப்போது கவிஞருக்கு புதிய வேலைக்குச் சேர சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் செல்ல 30 ரூபாய் அவசரத் தேவை, அதற்கு சென்னையில் யாரிடமும் கடன் கிடைக்காத நிலை, மூன்று நாட்கள் வெறும் டீ மட்டுமே குடித்து நாட்டுப்புறக் கலைஞர்கள் பற்றிய கதைகளை கைப்பிரதிகளாக பல பக்கங்கள் எழுதி நானூறு கிராம்களுக்கு அதை எடை போட்டு அதை 50 ரூபாய்க்கு அவர் விற்பனை செய்ததைச் சுவை படச் சொல்கிறார்,

கவிஞர் மேலும் , அண்ணாத்துரை முதலியார் மீது இவர் வைத்த நம்பிக்கை, அவர் மீது ஈடுபாடு வரக்காரணமான நெகிழ்ச்சியான சம்பவங்கள், அண்ணாத்துரை, இ.வி.கே.சம்பத் உள்ளிட்ட கழகத்தின் நிஜமான அபிமானிகளுக்கு செய்த பச்சை துரோகங்களை நெஞ்சம் கொதிக்கச் சொல்லியிருக்கிறார் கவிஞர். பெரியாரின் மூத்த சகோதரரின் மகனான இ.வி.கே.சம்பத் தான் திமுக என்ற கட்சியில் அண்ணாதுரையையும் விட பலம் பொருந்தியவராக இருந்திருக்கிறார். என்பதைக் கேட்கும் போது நமக்கு வியப்பு மேலிடுகிறது.இவரது மகன் தான் இன்று நாம் காங்கிரஸில் பார்க்கும் இவிகே எஸ் இளங்கோவன்.இவரது சகோதரர்  இனியன் சம்பத்,இவரது மனைவி சுலோச்சனா சம்பத்.

அது தவிர திமுக என்னும் கட்சிக்குள் அப்பொழுது மெல்ல நுழைந்த சினிமா நடிகர்கள் ஆதிக்கத்தையும் கவிஞர் அடியோடு வெறுத்தே வந்திருக்கிறார், கருணாநிதியுடன் தோழமை கொண்டது போல எம்.ஜி.ஆருடன் அவர் தோழமை கொள்ளவில்லை. தன் தென்றல் பத்திரிக்கையில் நடிகர்களை கூத்தாடிகள் என்றே சாடி எழுதியும் வந்திருக்கிறார்.

இ.வி.கே.சம்பத் , திமுக  கட்சியில் கருணாநிதிக்கு பூதாகரமான முக்கியத்துவம் அளிக்கப்படுவதைக் கண்டித்து கட்சியை உடைக்க எத்தனித்த தருணங்கள், அவர் நுங்கம்பாக்கத்தில் இருந்த மூன்று நாள் உண்ணாவிரதம், அண்ணாதுரை அப்போது அழது ஆர்பாட்டம் செய்து உண்ணாவிரதத்தை கைவிடச் செய்தது, கருணாநிதிக்கு சாதகமாக திமு கழகத்துக்குள்ளே திரண்ட நடிகர்கள்  கூட்டம், அவர்களின் பின்னே திரண்ட ஸ்டண்ட்மேன்கள், மதுரையைச் சேர்ந்த கைத்தடிகள், கொலைக்கு அஞ்சாத கூலிகள், அவர்களைக் கொண்டு கருணாநிதி ஆடிய ஆட்டங்கள், திருச்சி பொதுக்கூட்டத்தில் கவிஞர் பேசுகையில், கருணாநிதி கைக்கூலி ஒருவனை ஏவி விட்டு அவரை செருப்பால் கன்னத்தில் அறைய எத்தனித்தது, கவிஞர் அதிலிருந்து தப்பித்தது, எனப் படிக்கப் படிக்க சுவாரஸ்யம்.கூடும் ,  நடிகர்களில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் , எம்.ஜி.ஆர் , எம்,ஆர்.ராதா என யார் பெயரையுமே கவிஞர் குறிப்பிட்டு எங்கேயுமே சொல்லவில்லை .

கருணாநிதிக்கு கவிஞரின் மீது உரசல் வரக் காரணமான சம்பவம் என்று எதைச் சொல்லுகிறார் தெரியுமா? கவிஞர் அப்போது இரண்டாம் திருமணம் செய்து கொண்டாராம், உடனே அதைக் கண்டித்த கருணாநிதி,கவிஞரின் பெயரிட்ட உறுப்பினர் பேட்ஜை பறித்துக்கொண்டாராம். அது தவிர கவிஞரை திமுக மாநாட்டில் கலந்து கொள்ளவும் தடை விதித்தாராம்,இது எப்படி இருக்கிறது பாருங்கள்?!!!

கவிஞர் தான் புகழுக்கு ஆசைப்பட்டு அரசியலில் விழுந்தேன் என்பதை ஒத்துக்கொள்கிறார். அவர் எந்த சூழ்நிலையிலும் பயப்பட்டதில்ல என்பதை நாம் பல சம்பவங்கள் மூலம் அறிய வருகிறோம், புகழ் கிடைக்கும் என்ற நப்பாசையில் தான் தென்றல் என்னும் 12 பக்கங்கள் கொண்ட மாதப்பத்திரிக்கையை பல வருடகாலங்கள் மிகுந்த நஷ்டத்தில் நடத்தி வந்திருக்கிறார். அதில் அண்ணாவைப் பற்றி புகழாரம் சூட்டி கட்டுரைகள் பலவும் எழுதி வந்திருக்கிறார். அண்ணாதுரையின் பெயரையே தன் 9 மகன்களில் ஒருவருக்குச் சூட்டி அழகு பார்த்திருக்கிறார்.கவிஞருக்கு 5 மகள்களும் உண்டு,15 பிள்ளைச்செல்வங்களில் விசாலி கண்ணதாசனும்,கலைவானனும் வள்ளியம்மை என்னும் மனைவிக்கு பிறந்தவர்கள்.

கவிஞர், இ.வி,கே.சம்பத்தை மட்டுமே தன்னலமில்லா பிறவி,கைக்காசை போட்டு கட்சி நடத்தியவர் என்கிறார். அவரின் பின்னே திரண்ட தொண்டர்கள் அத்தனை ஆதரவாளர்களையும் அவர் அப்படியே பார்க்கிறார். கருணாநிதி, அன்பழகன் பொன்றோர் ஆதாயம் கருதியே அரசியலுக்குள் நுழைந்தவர்கள் என்கிறார். அதிலும் அன்பழகன் ஓரிடத்தில் சம்பத்தைப் பார்த்து நீங்கள் அடிப்படையிலேயே செல்வந்தர், உங்களுக்கு அரசியல் என்பது சேவை, எங்களுக்கு இது தான் தொழில், ஆகவே மாபெரும் மாற்றுக்கட்சியாக திமுக உருவெடுக்கையில் அதை உடைத்துவிடவேண்டாம் என நெக்குருகி  கெஞ்சுகிறார்.மேலும் கவிஞர் v.p.ராமன் என்னும் வழக்கறிஞர் மற்றும் பழுத்த அரசியல்வாதியையும் மிகவும் நன்றி கூறுகிறார்,அவரின் 7 லட்சம் ரூபாய் கடனால் பாதிக்கப்பட்ட பொழுது கவிஞர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து தன்னைக் காத்ததைக் குறிப்பிடுகிறார்.இவர் இப்போதைய நடிகர் மோகன்ராமின் அப்பா.

கவிஞர் சென்னை மேயர் தேர்தலுக்கு அப்படி உழைக்கிறார், பொதுகூட்டம் பலவற்றுக்கும் தன் பாடல் எழுதும் பிழைப்பை விட்டுவிட்டுப் போய் பேசுகிறார், ஆனால் எல்லாம் பாராட்டுக்களையும் கருணாநிதி மற்றும் உப கோஷ்டியினரே அண்ணாதுரையிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர்,அதிலும் அன்று சீரணி அரங்கத்தில் வைத்து கருணாநிதிக்கு அண்ணாத்துரை மோதிரம் அணிவித்து விட்டு தம்பிக்காக பல கடைகள் ஏறி வாங்கிய மோதிரம், என் மனைவிக்கு கூட இப்படி தேடி வாங்கியதில்லை, என்று உச்சி முகர்ந்து பாராட்ட , கூட்டம் முடிந்ததும், கவிஞர் அண்ணாவைப் பார்த்து இப்படி செய்து விட்டீர்களே அண்ணா? எனப் பொரும, அவர்,அதற்கென்ன ?!!! அடுத்து எத்தனையோ பொதுக்கூட்டம் வருகிறது, நீயும் கருணாநிதி வாங்கி வந்தது போல மோதிரம் வாங்கிக் கொடு, அதை சபையில் நான் உனக்கு அணிவிக்கிறேன் என்கிறார், அதைக்கேட்டதும் கவிஞருக்கு மிகவும் அருவருப்பு பீடிக்கிறது.

கவிஞர் ஒரு கட்டத்துக்குப் பின் அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்ட கழக கண்மணிகள் எழுதிய கதை, கவிதை, கட்டுரை, எழுச்சி உரை என எதையும் படித்ததில்லை என்கிறார், அவர்களின் தட்டையான மொழி எங்கே தன்னையும் பீடித்துக்கொள்ளுமோ?!!! என்று அஞ்சியே அவ்வாறு செய்ததாகச் சொல்லுகிறார்.

கவிஞர், கருணாநிதி, மற்றும் ஒரு முக்கியஸ்தர்,மூவரும் ஒன்றாகச் சென்று ராயப்பேட்டையில் ஒரு பிராத்தலுக்குச் செல்கின்றனர், தலா 50 என 150 ரூபாய் அங்கே பெண்ணின் அப்பாவான தரகனிடம் தரப்படுகிறது, அங்கே வேலை அமோகமாக முடிந்தவுடன்.கருணாநிதி மட்டும் துண்டை தலையில் கட்டிக்கொண்டு கோதாவில் இறங்கி, உன் பெண் என்னுடன் சரியாக ஒத்துழைக்கவில்லை,அவள் அளித்த சேவையில் திருப்தியில்லை,பணம் திருப்பித் தருகிறாயா? இல்லை போலீசைக் கூப்பிடவா? என்று ரகளை செய்ய அவன் பணம் 150ஐ அழுதபடி திருப்பித் தந்ததைக் குறிப்பிடுகிறார்.

மேலும் அண்ணாத்துரைக்கும் இளம்பெண்கள் தான் பலவீனம் என்று கவிஞர் குறிப்பிடுகிறார், தன் வேலைக்காரி கதையில் ஒரு பெண் மீசை,தலைப்பாகை அணிந்து ஆணாக  வருவது போலவே ,அவர் நிஜவாழ்விலும் இளம்பெண்களை ஆண்வேடம் இட்டுத் தருவித்து சுகிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் என கவிஞர் சொல்லுகிறார். வேறு யாராவது இதையெல்லாம் எழுதி இருந்தால் அச்செய்திக்கு முக்கியத்துவம் சிறிதும் இருந்திருக்காது. மஞ்சள் பத்திரிக்கையில் வரும்  கிசு கிசுக்கள் போலவே பல்லிளித்திருக்கும். ஆனால், கண்ணதாசன் தி.மு.க தலைவர்களின் நடத்தையை வனவாசம் புத்தகமாக 1965ஆம் ஆண்டு முதல் பதிப்பில் அம்பலப்படுத்திய போது சம்பந்தப்பட்டவர்களே வாயை திறக்கவில்லை என்பதோடு, கண்ணதாசன் தன்னுடைய நடத்தைகள் குறித்தும் மிக பகிரங்கமாகவே எழுதியிருக்கிறார் என்பது நடந்தவற்றிற்கு மேலும் வலுவூட்டுகிறது.

மேலும் முக்கியமாக கருணாநிதிக்கு இருந்த அகம்பாவத்தை இப்படி குறிப்பிடுகிறார், கவிஞரின் எழுத்து நடை மீது பொறாமை கொண்ட கருணாநிதி, இது என்ன இப்படி மொன்னையாக எழுதுகிறாய்,இந்தா இதைப்படி! படித்து விட்டு உன் எழுத்தை சீரமை என்று 2 புத்தகங்களை தூக்கிப் போடுகிறார், அது வாழமுடியாதவர்கள் என்னும் ஒர் புத்தகம் ,கருணாநிதி ஒரு இன்ஸெஸ்ட் எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார் என விளக்குகிறது அந்த சம்பவம் [incest writer] அவர் எழுதிய அந்த புத்தகத்தின் கதையின் சாராம்சம் இங்கே.

தன்னுடைய எழுத்துக்களை அவன் படிப்பதில்லை என்பதிலே அவனுடைய நண்பர் கருணாநிதிக்கு அசாத்தியக் கோபம் வரும்.

ஒருநாள் அவர் புதிதாக வெளியாகி இருந்த தனது இரண்டு புத்தகங்களை எடுத்து அவன் முன்னால் போட்டு “இதையெல்லாம் படியய்யா” என்றார்.

ஒரு புத்தகத்தை விரித்தான்.

நல்ல பண்பாடுள்ள கதை அது!

“வாழமுடியாதவர்கள்” என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது. கதையென்ன தெரியுமா??

படிக்காதவர்களும் படித்துப் பயன்பெற வேண்டிய புண்ணிய கதையல்லவா! விபரமாகவே சொல்கிறேன்.

மனைவியை இழந்த ஒரு போலிஸ்காரன், வறுமை தவழ்ந்து விளையடும் சின்னஞ்சிறு வீடு அவனது குடியிருப்பு. மாண்டு போன அவன் மனைவி சும்மா போகக்கூடாதென்று ஒரு மகளைவிட்டுப் போயிருந்தாள். கதையின் ஆரம்பத்திலேயே அந்த மகள், தளதளவென்று வளர்ந்து பளபளவென்று மெருகேறிக் கவர்ச்சிப் பாவையாக விளங்குகிறாள். சின்னஞ்சிறிய வீட்டில் தன்னந்தனியாக இருக்குமவள் திருமணத்திற்காகக் காத்துக்கிடக்கிறாள். இரவுகள் வந்துபோகின்றன. திருமணம் வரவில்லை. ஒவ்வோர் இரவிலும், தந்தையும் மகளும் மட்டுமே அந்த வீட்டில் துயில்கின்றனர். தந்தை மகளையே மனைவியாக்கிக் கொள்கிறான். அவன் அந்தப் புத்தகத்தை படித்து முடித்தான்.

தமிழ் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவன் நெஞ்சில் சூழ்ந்தது. அடுத்தடுத்து ‘குமரிக் கோட்டம்’, ‘ரோமாபுரி ராணிகள்’ ‘கபோதிபுரக் காதல்’ முதலிய நூல்களைப் படித்தான். அந்த நூல்களில் பலரிடம் கெட்ட ஒருத்தியைப் பளபளப்பாக வர்ணித்திருப்பார் கட்சியின் மூத்த தலைவர்…

ஓடிப்போனவள் கதியும், உருப்படாதவன் வாழ்க்கைச் சித்திரமும், ஆட்டங்கண்ட கிழவனுக்கு எழுந்த ஆசையும், அந்தி நேரத்துச் சுந்தரியின் தளுக்கும், நிரம்பி வழிந்த கழகப் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.

– பக்144/148 வனவாசம், கண்ணதாசன்.

வனவாசம் மொத்த பக்கங்கள்-310

விலை-150 ரூபாய்

எல்லா முக்கிய புத்தகக் கடையிலும் கிடைக்கும்

No comments:

Post a Comment