Monday 9 January 2023

சி.எஸ்.ஜெயராமன்

 சி.எஸ்.ஜெயராமன் 

கலைஞர் மு. கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணனிவர். அதாவது மு.க. முத்துவின் தாய்மாமன். இந்த அறிமுகத்தைவிட இவரை பாட்டு சித்தர் அல்லது இசை சித்தர் என்று தமிழ்த் திரையுலகம் அழைக்கும். அதுவே அவரின் உயர்ந்த அடையாளம். அவரின் குரல் கம்பீரமானது மட்டுமல்ல இனிமையானதும் கூட.

இவர் குரலில் இருந்த கம்பீரமும் கவர்ச்சியும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடும் வாய்ப்பினை கொண்டுவந்தது. 1940 முதல் 1960 வரை இவர் பாடிய பாடல்கள் ஏராளம். எம்ஜியாரும் சிவாஜியும் பெரிதும் மதித்த பாடகர் இவர். அதிலும் சிவாஜிக்கு இவர் குரல் மீது மையல் எனலாம். இவர் குரலுக்காகவே பாடல்கள் பதிவாயின.

பராசக்தி படத்தில் இடம்பெற்ற கா...கா...கா பாடல், விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே பாடல், ரத்தக்கண்ணீர் படத்தில் இடம்பெற்ற குற்றம் புரிந்தவன் போன்ற பிரபலமான பாடல்கள் இவர் குரலில் வெளியாகி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தன. அதிலும் 1958 ம் ஆண்டு வெளியான சம்பூர்ண ராமாயணம் படத்தில் இவர் பாடிய சங்கீத சௌபாக்யமே... இன்றுபோய் நாளை வாராய் ஆகிய பாடல்கள் சாகாவரம் பெற்றவை.

இவர் குரலின் சிறப்பை சொல்லும் சம்பவம் ஒன்று இவரின் இளம் வயதில் நடந்தது. அதை அவரே சொல்லியிருக்கிறார். ஒருமுறை கல்கத்தாவில் சூட்டிங். படப்பிடிப்பின் இடைவேளையில் சி.எஸ். ஜெயராமன் ஒரு மர நிழலில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மாபெரும் ஆளுமை வருகிறார். ஆனால் அவர் யார் என்பது ஜெயராமனுக்கு தெரியாது. வெண் தாடியோடு ஒளி பொருந்திய கண்களை உடைய அந்த முதியவர் ஜெயராமனிடம் வந்து, “ஒரு பாடல் பாடு” என்று ஆங்கிலத்தில் சொன்னார். யார் என்று தெரியாத மனிதர் பாடச் சொல்கிறார். ஜெயராமனால் மறுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவரின் தேஜஸ் இருக்கிறது. உடனே பாடுகிறார். பாடி முடித்ததும் அந்த மனிதர் ஜெயராமனை தட்டிக்கொடுத்து, ‘தெய்வீகக் குரல்’ என்று சொல்லி ஆசீர்வதித்து விட்டுச் சொன்றாராம். அவரின் தொடுதல் சி.எஸ். ஜெயராமனை சிலிர்க்க வைத்துவிட்டது. அந்த மனிதர் நகர்ந்துபோனதும் சுற்றுமுற்றும் இருந்தவர்கள் ஜெயராமனை நெருங்கி ‘அவர் யார் என்று தெரியுமா...’ என்று கேட்டார்கள். சி. எஸ். ஜெ தெரியாது என்று சொன்னார். அப்போது அவர்கள் சொன்ன பதில் சி.எஸ். ஜெயராமனை மகிழ்ச்சியிலும் சிலிரிப்பிலும் ஆழ்த்தியது. அவர் வேறு யாருமல்ல... பாரத தேசத்தின் பெருமை ரவீந்திரநாத் தாகூர்.

பக்திப்பாடல்கள் பாடுவது சி.எஸ். ஜெயராமனுக்கு மூச்சுபோல மாறிபோனது. அதற்கு சிதம்பரத்திலும் தமிழகம் முழுக்க இருக்கும் கோயில்களிலும் அவர் பாடியபோது நிகழ்ந்த அற்புதங்களே அதற்கு ஆதாரம். அந்நாளின் முதல்வர் அண்ணா சி.எஸ். ஜெயராமனை இசைக்கல்லூரி முதல்வராக ஆக்கினார். தகுதி நிறைந்த அவர் அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாத அளவுக்கு கொள்கைச் சிக்கல் ஏற்பட்டதெல்லாம் தனிக் கதை. 

கொசுறுச் சேதிகள் :  

தெய்வப் பிறவி படத்திற்கான ரிக்கார்டிங். “அன்பாலே தேடிய என்” எனத்துவங்கும் பாட்டிற்கு இடையில் ‘ஹம்மிங்’ பண்ணத் தேவை ஒரு பெண் குரல். பலர் ஆடிஷனுக்கு வந்திருக்கிறார்கள். ஒல்லியான ஒரு பெண்ணும் வந்திருக்கிறார். குரல் சரியில்லை என்று அவரை அனுப்ப முயற்சித்தபோது ஜெயராமன் தடுத்து அவரைப் பாட வைத்திருக்கிறார். அப்படி ‘ஹம்மிங்’கில் ஆரம்பித்து பிரபலமானவர் பின்னணிப்பாடகியான எஸ்.ஜானகி.

எம்.ஜி.ஆருக்கு புதுமைப்பித்தன் உட்பட மூன்று படங்களுக்கு பின்னணி பாடியிருக்கிறார். பிறகு அடுத்தடுத்து பத்து படங்களுக்கு மேல் இசையமைப்பாளராகிவிட்டார். அதில் ஒரு படம் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய ‘ ரத்தக்கண்ணீர்’. அப்போது ஒரு பாடலுக்கு இசையமைக்க ஜெயராமன் வாங்கிய தொகை 750 ரூபாய். ரத்தக்கண்ணீர் படத்திற்கான இசை, பாடல்கள் அனைத்திற்கும் சேர்த்து இவர் வாங்கிய தொகை பதினோராயிரம் ரூபாய்தான். அதிலே ’குற்றம் புரிந்தவன்’னு ஒரு பாட்டு வரும். பாட்டு இடையிலே எம்.ஆர். ராதாவோட குரல் இடையிடையே வசனமா வரும். ஆரம்பத்தில் இப்படிச் செய்யலாமான்னு நினைச்சப்போ பலர் மலைச்சாங்க. அந்தப் பாடல் நல்ல ஹிட்டாயிடுச்சு. பின்னாளில் பலரும் அந்த மாதிரி நிறைய பண்ணினார்கள்.

No comments:

Post a Comment