ஒமிக்ரான் திரிபு: தமிழ்நாடு அரசால் சமாளிக்க முடியுமா? சுகாதாரத்துறை வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
- ஆ. விஜயானந்த்
- பிபிசி தமிழுக்காக
ஒமிக்ரான் கொரோனா திரிபுக்கு எதிரான தடுப்பூசியின் திறன்கள் குறித்து சந்தேகம் எழுப்பியிருக்கிறார் மாடர்னா தடுப்பூசி நிறுவன தலைவர் ஸ்டீபான் பேன்செல்.
'கொரோனா தொற்றின் மூன்றாவது அலை' என கூறப்படும் ஒமிக்ரான் திரிபை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் தயாராகி வருகின்றன. ` கோவிட் தடுப்பூசியால் ஒமிக்ரான் திரிபை எதிர்கொள்ள முடியுமா என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு அரசும் போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது' என்கின்றனர் தமிழ்நாடு சுகாதாரத்துறை வல்லுநர்கள்.
ஒமிக்ரான் - கவலைக்குரிய திரிபா?
கொரோனா தொற்றின் முதல் அலையின்போது பொது முடக்கம் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் நடந்தே தங்களது ஊர்களுக்குப் புறப்பட்டனர். அதன் பிறகு பல இடங்களில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன.
அடுத்து, கொரோனா இரண்டாவது அலையின்போது போதிய ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாமலும் மருத்துவ செலவுக்குப் பணமில்லாமலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதியில்லாததால், தற்காலிக மருத்துவ முகாம்களை அரசு ஏற்படுத்தியது.
தற்போது கோவிட் இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக தணிந்து வரும் நேரத்தில் தென்னாப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் திரிபு, உலக நாடுகளை அச்சமடைய வைத்துள்ளது.
`இது கவலைக்குரிய திரிபு' என அறிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், தங்களது 194 உறுப்பு நாடுகளுக்கும் பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இடர்மிகுந்த மக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை செலுத்துவது, போதிய சுகாதார வசதிகளை உருவாக்குவது என பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது.
12 நாடுகள் என்னென்ன?
அதேநேரம், ஒமிக்ரான் திரிபை எதிர்கொள்வதற்கு தமிழ்நாடு அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போஸ்ட்வானா, சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளை அதிக பாதிப்புள்ள நாடுகள் பட்டியலில் தமிழ்நாடு அரசு வகைப்படுத்தியுள்ளது.
இதற்காக, விமான நிலையங்களில் சுகாதார அலுவலரை நியமித்து வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் எட்டு நாள்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
இ. தேனிராஜன், முதல்வர் - சென்னை மருத்துவக் கல்லூரி
இந்நிலையில், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``ஸ்பைக் புரதத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய ஒமிக்ரான் திரிபானது தென்னாப்பிரிக்காவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இளைஞர்களை பாதித்துள்ளது. கடந்த நவம்பர் 24 ஆம் தேதிதான் இதனைக் கண்டறிந்து உலக சுகாதார நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
ஆய்வுகளின் நோக்கம் என்ன?
தற்போது ஒமிக்ரான் திரிபானது, ஒருவருக்கொருவர் பரவுகின்ற தன்மை உள்ளதா என்பது கண்டறியப்படவில்லை. அதனால் 4 முதல் 8 வாரங்கள் வரையில் பொறுத்திருப்போம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அதாவது, ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஒமிக்ரான் திரிபு வருகிறதா, தடுப்பூசி போட்டவர்களுக்கு வருகிறதா, மேலும் தடுப்பு மருந்தை எதிர்கொள்வதில் ஒமிக்ரான் எந்தளவுக்கு செயல்புரிகிறது என்பதைப் பற்றிய ஆய்வுகளும் நடந்து வருகின்றன. அதன் முடிவுகள் வெளிவரும்போது தெளிவான கண்ணோட்டம் பிறக்கும்,'' என்கிறார்.
மேலும், ``இந்த விஷயத்தில் உலக சுகாதார நிறுவனமும், முகக்கவசம், தனிமனித இடைவெளி, தேவையற்ற பயணங்களைத் தடுப்பது போன்ற அதே வழிமுறைகளையே தெரிவித்துள்ளது. அதேநேரம், `அதீத கட்டுப்பாடுகள் வேண்டாம்' எனவும் கூறியுள்ளது. அடிப்படை விதிகளை மீறாமல் இருக்கும் வரையில் நமக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை,'' என்கிறார்.
``ஒமிக்ரான் திரிபை எதிர்கொள்ள வேறு எதேனும் தடுப்பு முறைகள் உள்ளதா?'' எனக் கேட்டபோது, `` அதே தடுப்பு முறைகள்தான். மூக்கு வழியாகத்தான் பரவுகிறது. பழைய தடுப்பு நடவடிக்கைகளே போதுமானதாக உள்ளது'' என்கிறார்.
தடுப்பூசி போதுமானதா?
``மெகா தடுப்பூசி முகாம்களை தமிழ்நாடு அரசு நடத்திவரும் வேளையில், ஒமிக்ரான் திரிபை எதிர்கொள்ள இந்தத் தடுப்பூசி போதுமானதா?'' என்றோம்.
``தமிழ்நாட்டில் 75 சதவிகிதத்துக்கும் மேல் முதல் தவணை தடுப்பூசி எடுத்துள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதமாக உள்ளது. இதனை அதிகரிக்க வேண்டும். ஒமிக்ரானை எதிர்கொள்வதற்கு இந்தத் தடுப்பூசிகளே போதுமா என்பதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன் முடிவுகள் வெளிவரும்போதுதான் தெரியவரும். ஆனால், அனைத்து வகையான திரிபுகளுக்கும் கோவிட் தடுப்பூசிகள் பாதுகாப்பைக் கொடுத்துள்ளன,'' என்கிறார்.
அடுத்ததாக, ஒமிக்ரான் திரிபை எதிர்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்த தேரணிராஜன், ``தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் அண்மையில் நடத்திய கூட்டத்திலும், நமது மருத்துவக் கட்டமைப்பை எந்த வகையிலும் மாற்றியமைக்கவில்லை.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள ஏழு மாடி கட்டடங்களை வேறு எதற்காகவும் நாங்கள் பயன்படுத்தவில்லை. அங்குள்ள ஒவ்வொரு இடத்திலும் 50 ஐ.சி.யு படுக்கைகள் அப்படியே உள்ளன. இங்கு 450 வெண்டிலேட்டர்கள் உள்ளன. தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப அவை உள்ளன. மேலும், மருத்துவர்களின் எண்ணிக்கையும் நாங்கள் குறைக்கவில்லை. ரெம்டெசிவீர் உள்ளிட்ட மருந்துகள் மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் மூலம் வந்து கொண்டிருக்கின்றன.
இயல்பு நிலை எப்போது திரும்பும்?
தவிர, கோவிட் பேரிடரின்போது கறுப்பு பூஞ்சைக்கான சிகிச்சையை அதிகளவில் மேற்கொண்டோம். கிட்டத்தட்ட 1,100 பேர் இங்கு உள்நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்கள். உயிரிழப்பும் மிகக் குறைவாக இருந்தது. வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் இங்கு வந்து சிகிச்சை பெற்றனர். அதற்குக் காரணம் நமது மருத்துவர்களின் கூட்டு முயற்சிதான்'' என்கிறார்.
அடுத்ததாக, விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, ``வெளிநாட்டில் இருந்து காய்ச்சலோடு யாராவது வந்தால் அவர்கள் 8 நாள்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆர்டிபிசிஆர் சோதனையில் பாசிட்டிவ் என வந்தால் மூலக்கூறு ஆய்வு நடத்தப்படும். அனைத்து வகைகளிலும் தடுப்பு நடவடிக்கைளையும் மேற்கொண்டு வருகிறோம். முன்பெல்லாம் பாரசிட்டமால் மாத்திரையை போட்டுக் கொண்டு வருவார்கள். அதனால்தான் மீண்டும் ஒரு பரிசோதனையை மேற்கொள்கிறோம். விமான நிலையங்களை மூடுவது என்பது தீர்வாக இருக்காது. இந்த நடைமுறைகளை கண்டிப்புடன் கடைப்பிடிக்கும்போது இயல்பான வாழ்க்கைக்கு நம்மால் திரும்ப முடியும்'' என்கிறார் தேரணிராஜன்.
``தமிழ்நாடு அரசின் கட்டாய தடுப்பூசியை கண்காணிக்கும் அளவுக்கு அரசிடம் மனிதவளம் உள்ளதா?'' எனக் கேள்வியெழுப்பியபோது, `` தகுதியான நபர்களின் பட்டியலை எடுத்துள்ளோம். மக்களிடமும், ` இரண்டு அலைகளில் தப்பித்துவிட்டோம் பிறகு ஏன் போட வேண்டும்?' என நினைக்கின்றனர். சமூக வலைதளங்களில் வரக் கூடிய தகவல்களை முக்கியமான ஒன்றாக அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது, மத்திய அரசு என்ன சொல்கிறது, தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் என்ன என்பதைத்தான் பார்க்க வேண்டும். ஐ.சி.எம்.ஆர் சொல்வதை வைத்துத்தான் செயல்படுகிறோம். தவிர, ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் நாங்களும் ஒரு பங்குதாரராக இருக்கிறோம். கொரோனா தொற்று பாதித்த 57,580 பேரை சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளோம். எங்களுக்கு மேல் உள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் எங்களை ஊக்குவிப்பதும் திறம்பட செயல்பட முக்கிய காரணமாக உள்ளது,'' என்கிறார் மருத்துவர் தேரணிராஜன்.
ஒமிக்ரான் திரிபு: உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம் - எச்சரிக்கும் WHO
No comments:
Post a Comment