Tuesday 9 July 2019

தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியலுக்கு பின்னால் இந்தியாவின் வழிநடத்தல் இல்லை

தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியலுக்கு பின்னால் இந்தியாவின் வழிநடத்தல் இல்லை. எமக்கு சாி என தொிந்தவற்றை மட்டும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். சில தவறான அணுகுமுறைகளினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனான கூட்டிணைவு முயற்சி தோல்வியில் முடிந்திருக்கின்றது என வடமாகாண முன்னாள் முதலமைச்சா் க.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளாா்.

தமிழ் மக்கள் கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான கூட்டை உருவாக்க அண்மையில் முயற்சிக்கப்பட்ட நிலையில் அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக இன்று மாலை ஊடகங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் விளக்கமளித்தார். இதன்போது பேசிய அவர்,

தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் ஒத்த கருத்துடையவர்கள் ஒருமித்துப் பயணிக்க வேண்டும் என்பதில் நான் குறியாக இருக்கின்றேன். அதனால்தான் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்து

வெற்றிகரமாக “எழுக தமிழ்” கூட்டங்களை நடத்திய கட்சிகளையும், அரசாங்கத்திற்கு எமது அரசியல் முன்மொழிவுகளை எம்முடன் இணைந்து கையளித்தவர்களையும் ஒன்றுபட்டு செயலாற்றுமாறு வலியுறுத்தி வந்தேன்.

வடக்கு கிழக்கில் இன்று ஏராளமான தமிழ், முஸ்லிம், சிங்கள கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாணசபை அதிகாரமும் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு சார் இனப்படுகொலை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு போதுமானதில்லை. எனினும் இவற்றுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மேற்கொள்வதற்கு எமது ஒன்றுபட்ட பலம் அவசியமானதாக இருக்கின்றது.

மறுபுறத்தில், தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாண சபை அதிகாரமும் தவறானவர்கள் கைகளுக்கு செல்கின்றபோது அவற்றை அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் பாரிய ஆபத்தும் இருக்கின்றது.

இதனால் தான் ஒரே சிந்தனை மற்றும் ஒரே கருத்துள்ள தமிழ் மக்கள் பேரவையில் உள்ள தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒரு கூட்டணியை அமைத்து தேர்தல்களில் பலமான ஒரு அணியாக போட்டியிடவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திவந்தேன். அதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சி ரீதியாக உடைக்கும் வகையில் நாங்கள் செயற்படப்போவதில்லை என்றும் கூறியிருந்தேன்.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையே நான் எதிர்பார்க்கும் இந்த கொள்கை ரீதியான ஒத்திசைவு அதிகம் இருந்து வந்தாலும் கடந்த காலங்களில் “எழுக தமிழ்” கூட்டங்களை நடத்தியமை அரசியல் யாப்பு முன்யோசனைகளை அரசாங்கத்திற்கு கையளித்தமை போன்ற நிகழ்வுகளை ஒன்று சேர்ந்து வெற்றிகரமாக நடத்தியிருந்தாலும் இந்தக் கட்சிகள் தேர்தல்களிலும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்று விரும்பினேன். இந்த அடிப்படையில் தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இந்த கூட்டணியில் இருக்கவேண்டும் என்று பெரிதும் விரும்பினேன்.

ஆனால், தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் எமக்கும் இடையே கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஏற்பட்ட முரண்பாடுகள், இந்த கட்சிகள் இரண்டும் ஒன்றாக என்னுடன் இணைந்து எதிரான பிரதான சவால்களாக இருந்து வருகின்றன. அத்துடன் எமது தமிழ் மக்கள் கூட்டணி இந்தியாவின் சொல்லைக் கேட்டு செயற்படுவதாகவும் இந்தியா தம்மை இந்த கூட்டணிக்குள் இணைக்கக்கூடாது என்று சொல்லியிருப்பதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பகிரங்கமாக கூறி இருந்தது.

இது முற்றிலும் தவறு. எனது அரசியலில் இதை செய், இதை செய்யாதே என்று இந்தியா இன்றுவரை எந்த சந்தர்ப்பத்திலும் அறிவுறுத்தியதோ, ஆலோசனை சொன்னதோ கிடையாது. எது சரி என்று நினைப்பதையே நான் இன்றுவரை செய்துவந்துள்ளேன். இனியும் செய்வேன். ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் விரும்பும் ஒரு தீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்கு அவசியம் என்றும் அதனை இந்தியா செய்யும் என்றும் நான் நம்புகின்றேன்.

என்னைப் பொறுத்தவரையில் மக்களின் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் தான் முக்கியம். எனது கட்சியின் அடையாளமோ, எனது பிம்பமோ எனக்கு முக்கியமானவை அல்ல. அதனால்தான் ஏன் ஒரு கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியும் மக்கள் அதனைத் தான் விரும்புகின்றார்கள் என்பதை வலியுறுத்தியும் சில வாரங்களுக்கு முன்னர் தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அந்தரங்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன். இதில் பல விடயங்களை நான் குறிப்பிட்டிருந்தேன்.

முக்கியமாக ஏனைய கட்சிகளை உள்வாங்கி ஒற்றுமையாக செயற்படுவதற்கு ஒரு வாய்ப்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஒரு கொள்கை அடிப்படையில் சரியான பாதையில் செல்வதற்கு ஒரு இறுக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கையை தயாரித்து நாம் செயற்பட வேண்டும் என்றும் நான் கூறியிருந்தேன்.

தம்பி கஜேந்திரகுமாரை நேரடியாகச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறும் கேட்டிருந்தேன். இந்தியா எம்மை அவர்களுடன் சேர வேண்டாம் என்று கூறியிருந்தால் நான் ஏன் சைக்கிள் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்க முன்வர வேண்டும்?

ஆனால் இன்றுவரை தம்பி கஜேந்திரகுமார் எனது கடிதத்துக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை. ஆனால், காலைக்கதிர் பத்திரிகைக்கு வழங்கிய ஒரு பேட்டியில் நான் அனுப்பிய கடிதம் பற்றிக் குறிப்பிட்டு எனது யோசனைகளை நிராகரிப்பதாக அவர் கூறியிருந்ததை பார்த்தேன்.

பின்னர் கொழும்பு தமிழ் சங்கத்தில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் “விக்னேஸ்வரன் ஐயாவுடன்” மட்டுமே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணையும் என்று தம்பி கஜேந்திரகுமார் கூறியிருந்தார். தம்பி பிரபாகரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய தீர்க்கதரிசனமான முயற்சியில் இருந்து நாம் பாடங்களைக் கற்று எவ்வாறு தொடர்ந்து முன்நகர்ந்து செல்லவேண்டும் என்று தம்பி கஜேந்திரகுமாருடன் நேரடியாகப் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்பார்த்திருந்தேன்.

இந்தநிலையில் தான், பரந்த கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் தமிழ் மக்கள் தேசிய முன்னணியையும் கொண்டுவருவதற்குத் தான் அனுசரணை வழங்குவதாகக் கூறி எனக்கும் தம்பி கஜேந்திரகுமாருக்கும் நன்கு அறிமுகமான பேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் முன்வந்தார். அதனை நான் ஏற்றுக்கொண்டேன். பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கும் ஒரு முயற்சியாக தமிழ் மக்கள் கூட்டணிக்கும் தமிழ் மக்கள் தேசிய முன்னணிக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய அவர் முயற்சித்தார்.

இந்த சந்திப்பு நேற்று திங்கட்கிழமை நடைபெறுவதாக ஏற்பாடாகி இருந்தது. எமக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையீனங்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு சந்திப்பாகவே இது அமையவிருந்ததால் எந்த முன்நிபந்தனைகளும் எமக்கு இடையே இருக்கவில்லை.

ஆனால், கட்சியை இந்த கூட்டணியில் இணைக்காது இருப்பதற்கு நான் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறியே நண்பர் பேராசிரியர் முருகர் குணசிங்கம் தம்மிடம் கூறியதாகவும் அந்த அடிப்படையிலேயே சந்திப்புக்கு இணக்கம் தெரிவித்ததாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பேராசிரியர் முருகர் குணசிங்கம் கடந்த ஞாயிறுக்கிழமை சந்தித்தபோது அவருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. இது எனக்கு தெரிவிக்கப்பட்டது.

அப்படி எந்த ஒரு இணக்கத்தையும் நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என்று விளக்கியபோது நடக்க ஏற்பாடாகி இருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டது. இந்த விடயத்தில் நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை.

நல்ல ஒரு நோக்கத்துக்காகவும் எமது மக்களின் நன்மைக்காகவுமே இந்த சந்திப்பு முயற்சி ஏற்பாடாகி இருந்தது. ஆனால், தவறான அணுகுமுறைகளினால் இது சாத்தியமாகாமல் போயுள்ளது. தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஏனைய கட்சிகளில் இருந்து விலகி எமது கொள்கைகளை ஏற்று செயற்படவிரும்புபவர்களையும் இணைத்து செயற்படுவதே எமது நோக்கம்.

இந்த முயற்சியில் கட்சி நலன்களை முன்னிறுத்தி எந்த முன்நிபந்தனைகளையும் விதிக்காமல் எமது மக்களின் இன்றைய அவல நிலையைக் கவனத்தில் கொண்டு தான் கட்சிகள் செயற்படவேண்டும்.

அதேவேளை, எதிர்காலத்தில் தவறுகள் விடுவதில்லை என்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளே எமது மூச்சு என்ற பிரக்ஞையின் அடிப்படையிலும் பரஸ்பர நம்பிக்கை, அதேசமயம் இறுக்கமான ஒழுக்கவிதிகளுடன் தான் நாம் செயற்படவேண்டும். இந்த முயற்சியில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. ஆனால் அதேசமயம் முன்னேற்றமும் காணப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment