Saturday 5 February 2022

தூய வனத்து அந்தோனியார்

Robert Nelson, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.

தூய வனத்து அந்தோனியார்
தூய வனத்து அந்தோனியார் காட்டிற்குச் சென்று, கடுந்தவம் மேற்கொண்டிருந்தபோது சாத்தான் அவரைக் கடுமையாகச் சோதித்தது. “இவ்வளவு சொத்து சுகங்களை எல்லாம் விட்டுவிட்டு, இந்தக் காட்டுக்குள் வந்து இப்படிக் கஷ்டப்படுவதா?. பேசாமல் இங்கிருந்து போய், சந்தோசமான வாழ்க்கை வாழ்” என்று சொல்லி சாத்தான் அவரை மிகவும் சோதித்தது. அத்தகைய தருணங்களில் வனத்து அந்தோனியார் சாத்தானிடம், “ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவைத் தவிர, வேறு செல்வம் எனக்குத் தேவையில்லை” என்று சொல்லி சாத்தானின் தந்திரங்களை எல்லாம் முறியடித்தார். சாத்தான் அவரை வெற்றிகொள்ள முடியாது என்பதை உணர்ந்து அவரிடமிருந்து விலகிச் சென்றது.
சாத்தான் அவரைவிட்டு விலகிச் சென்றதும், அவர் இறைவனைப் பார்த்து, “இறைவா! என்னுடைய சோதனை வேளைகளில் என்னைவிட்டு நீ எங்கே போனாய்?” என்று கேட்டார். அதற்கு அவர், “நான் உன்னருகில்தான் இருந்தேன், உனக்கு எந்தவொரு துன்பமும் வராமல் காத்திருந்தேன், இனிமேலும் காத்திடுவேன். ஆனால் என்னவனோ நீதான் என்னை அழைக்கவேயில்லை” என்றார்.
வாழ்க்கை வரலாறு
தூய வனத்து அந்தோனியார் கி.பி. 251 ஆம் ஆண்டு எகிப்தில் உள்ள கோமா என்ற இடத்தில் செல்வச் செழிப்பான ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவருடைய குடும்பத்திற்கு என்று ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலபுலன்கள் இருந்தன. ஆசிரியர்கள் இவருடைய இல்லத்திற்கே வந்து, இவருக்குப் பாடங்களைச் சொல்லிக்கொடுத்தார்கள்.
இவருக்கு பதினெட்டு வயது நடந்துகொண்டிருந்தபோது, ஒருநாள் இவர் ஆலயத்தில் இருந்தபோது குருவானவர் சொன்ன, “நீ நிறைவுள்ளவனாக இருக்க விரும்பினால், முதலில் போய் உன்னுடைய உடமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடும், பின்னர் வந்து என்னைப் பின்தொடரும்” (மத் 19:21) என்ற வார்த்தைகள் அவரை மிகவே பாதித்தன. எனவே, அவர் தன்னுடைய வீட்டிற்கு வந்து, தனக்குச் சொந்தமான 3000 ஏக்கர் நிலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை தன்னுடைய தங்கைக்குக் கொடுத்துவிட்டு, மீத எல்லாவற்றையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, துறவற வாழ்க்கை மேற்கொள்ளத் தொடங்கினார். தொடக்கத்தில் வனத்து அந்தோனியார் தன்னுடைய ஊருக்கு அருகிலேயே துறவற வாழ்க்கையை மேற்கொண்டார். ஆனால், சாத்தானின் சோதனைகள் அங்கே அதிகமாக இருந்ததால் அவர் காட்டிற்குச் சென்று, தனியான ஓர் இடத்தில் தவ வாழ்வினை மேற்கொண்டார். கத்தோலிக்கத் திருச்சபையில் துறவு வாழ்க்கைக்கு வித்திட்டவர் இவர்தான் என்று சொன்னால் அது மிகையாது.

இவருடைய துறவு வாழ்க்கையைப் பார்த்த இளைஞர்கள் பலர் இவரிடத்தில் சீடராகச் சேர்ந்தார்கள். அதனால் இவர் தன்னுடைய 35 ஆம் வயதில் மேலும் இரண்டு துறவற மடங்களை நிறுவினார். அதில் ஜெபத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வந்தார். விவிலியத்தை ஆழமாக வாசித்து, அதனை தியானித்து வந்தார். கி.பி 311 ஆண்டு, ரோமையில் மாஜிமின் என்ற மன்னன் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டபோது, வனத்து அந்தோனியார் அங்கே சென்று, அவர்களைக் கிறிஸ்தவ விசுவாசகத்தில் வளர்த்தார். நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார். இப்படி கடுமையான பக்தி முயற்சிகளையும் தவ முயற்சிகளையும் மேற்கொண்டு வந்த வனத்து அந்தோனியார் கி.பி. 356 ஆண்டு தன்னுடைய நூற்று ஆறாம் வயதில் இறைவனடி சேர்ந்தார். 

No comments:

Post a Comment